Tuesday, November 01, 2011

ஒரு பிரம்மச்சாரியின் விபரீத ஆசை...




 திடீரென அன்று ஒரு விபரீத ஆசை ஒன்று தோன்றியது

தோசை!!!!!! 

ஆமாம் தோசை சப்பிட வேண்டும், அதுவும் நானே சுட்டு சாப்பிட வேண்டும்

இதில் என்ன விபரீதம் என நீங்கள் யோசிக்கலாம். அபுதாபியில் பிரம்மச்சரியாக கண்டதையும் தின்று, ருசி மறந்து, பசிக்காக மட்டும் உண்டு வாழும் ஒரு ஆத்மாவுக்கு இது விபரீத ஆசை இல்லாமல் வேறென்ன??

ஆனா, நாமெல்லாம் ஓடுற ரயில ஒத்தக்கையால அதுவும் இடக்கையால நிறுத்தின ஆட்கள் அல்லாவா? விடுவமா!!!!! 

ஒரு சுப யோக சுப தினமான வியாழன் இரவு, “ ஆபரேசன் ஒப் தோசை ஆரம்பமானது

என்னவென்றாலும் நான் மட்டும்தானே. அதான் கோதாவில் குதித்தாயிற்று. தோசை சுட அடுப்பு சட்டி முக்கியமாக நெருப்பு என்பன தேவை என்ற அடிப்படை அறிவு ( ??? ) இருந்ததாலும், அவை கிடைக்கக்கூடியதாக இருப்பதால், தோசைக்கு வேறு என்ன தேவை என மூளையினை கசக்கியதில், தோசை மாவு என்று அசரீரி ஒலித்தது.

தோசை மாவு வாங்க, சுப்பர் மார்க்கட்டிற்குள் நுழைந்தால், இன்னும் குழப்பம். வகை வகையா, மாவுகள் எது தோசைக்கு என்பதை யாரிடம் கேட்பது?? தலையினை பிய்க்க தொடங்கும் போது, மார்க்கட் ஊழியர் வந்துவிட்டார். அவரிடம் இப்போ எந்த பாசையில கேட்பது என்ற பிரச்சினை. அனேகமாக அந்த மனிதர் இந்திக்காரராக இருக்க வேண்டும். எனது தோசை ஆசையில் ஹிந்தி ஒரு வில்லனா? என எண்ணிக்கொண்டே, எனது ஹிந்தி அறிவினை சபித்துக்கொண்டேன்.

கியா சாப்? “ என்றவரிடம்எனக்கு சொல்ல பதில் இல்லை.

பின்ன தோசை மாவு வேண்டும் என்பதை ஹிந்தியில் சொல்ல தெரிய வேண்டுமே. ஒரு வழியாக கையால் காலால் நடனமாடி புரியவைத்தபோது, அவன் சிம்பிளா,   “ஹா! தோசாஎன்றான்

அடப்பாவி, இதச்சொல்லவா இவ்வளவு ரிஸ்க் எடுத்தாய் என்ற அவன் கேவலப்பார்வைக்கு பதில் தராமல், தோசை மாவுடன் நடையினை கட்டினேன்.

தோச மாவு ரெடி, தோசக்கல், அடுப்பு எல்லாம் ரெடி, இனி ஆட்டம் ஆரம்பம். அபுதாபியே உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை 10 மணிக்கு ( இங்க வெள்ளி என்றால் இப்பிடித்தான் ) எனது தோசை சுடும் படலம் ஆரம்பமானது.

வீட்டில் அம்மா தோசை சுடுவதை பார்த்திருக்கின்றேன் என்ற தகுதியினை விட வேறென்ன தகுதி எனக்கு வேண்டும் இந்த தோசையினை சுடுவதற்கு. என்ற வேகத்தில் சட்டியினை பற்ற வைத்தாயிற்று. மாவும் ரெடி. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான். என்ன தைரியமா தொடங்கினாலும் கை கொஞ்சம் வெட வெடப்பதை தடுக்க முடியல. ஆனாலும் விர்ரதா இல்ல.. இன்னைக்கு தோசையா நானா? எனப்பார்த்து விடுவது என்ற முடிவுடன், முதலாவது கரண்டி மாவினை எடுத்து கல்லில் விட்டேன்

ஏதோ பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் ஒரு மாணவனின் படபடப்பு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்என்ற இசையுடன் மாவு தோசக்கல்லுடன் கதை பேசியது.. “சக்ஸஸ்.” மனதுக்குள் கூவிக்கொண்டேன். நிகழப்போகும் விபரீதம் புரியாமல்..

ஊற்றிய மாவு வட்டம் போலவும் இல்லாமல் .. வேறு எந்தவொரு வடிவம் போலும் இல்லாமல் யூகிக்கவே மிக கஸ்டமான ஒரு வடிவில் இருந்தது. சரி மாவு தோசையாகிவிட்டது என்ற முடிவில் கரண்டியினை விட்டு அதை வெளியே எடுக்க முயற்சித்தேன்ரொம்ப ரொம்ப ஐக்கியம் போல.. கல்லுடன் எனது முதல் தோசை ஒட்டிக்கொண்டது.

அடடா. முதல் முயற்சி தோல்வியில் முடிவதா என்ற பதை பதைப்பு தொற்றிக்கொள்ள, தோசையினையும் கல்லினையும் பிரித்துவிடுவது என்ற முடிவில் ஒரு தமிழ் சினிமா வில்லனாகிவிட்டேன்

கரண்டியினை விட்டு ஒரு எத்து எத்தியதில் பாதி தோசை முன் சுவரில் அப்பிக்கொண்டது. ஊற்றிய மாவு அதிகம் அதுதான் பிரச்சினை என ஒரு வழியாக சமாதானப்பட்டுக்கொண்டு, மீதியினையும் கழற்றி முடித்து, ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரானேன்.

மாவினை கலந்து கரண்டியில் அள்ளும் போது, அறையில் இருந்து,

மச்சான் டைம் போயிட்டு, பள்ளிக்கு போகணும், குளிக்காம அங்க என்னடா பண்றாய்?” கத்திக் கொண்டிருந்தான் நண்பன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. அதுக்குள்ள ரைம் போயிட்டா!!!!!!!

ஒன்ன கூட முழுசா தோசையா பாக்கல்லியேடா!!!!!! 
என்ன கொடுமை இது!! 
இனி என்னத்த செஞ்சி.. என்னத்த..

நெடிய பெருமூச்சோடு, மீதி மாவினை, இனி தோசை சுடுவதென்றால் ஒரு நாள் லீவெடுத்துத்தான் சுடுவது என்ற உறுதியோடு தூக்கி கடாசிவிட்டு , பள்ளிக்கு போக தயாரானேன்.

அன்றைய பகல் பொழுது வழமை போல, பக்கத்து மலையாள சேட்டன் கடை சோற்றோடு இனிதே(!@!#@#@#!#$@$#) முடிந்தது.





2 comments:

Ramesh said...

you too? same blood!!!!!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்ல அருமையான எழுத்து நடை
நீங்க நிறைய எழுதலாமே டைம் இல்லையா?

ஆனால் ஒன்று நீங்கள் மட்டும் முழுநேரம் எழுத ஆரம்பித்தால் நாங்களேல்லாம் காணமல் போய் விடுவோம் நீங்க தான் நம்பர் ஒன் பிளாக்கர்

எழுத முயற்சி பன்னுங்கள்
சமூக அவலங்களைப் பற்றி