Showing posts with label ஹஜ்ஜுப்பெருநாள். Show all posts
Showing posts with label ஹஜ்ஜுப்பெருநாள். Show all posts

Thursday, November 03, 2011

இனித்த பெருநாட்கள்


இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.


புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்


கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு, 
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!!