கல்வி அமைச்சர்
பந்துல குணவர்த்தன அவர்கள், 3 பேர் குடும்பம் ஒன்றுக்கு மாசத்திற்கான செலவுகளை மேற்கொள்ள
7500.00 இலங்கை ரூபாய்கள் போதும் என தெரிவித்த கருத்து இப்போது இலங்கையின் அனைத்து
மட்டங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
விலைவாசி கிடு
கிடு என ஏறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் 7500.00 ரூபாய்கள் மூன்று பேர் உள்ள குடும்பத்துக்கு
போதும் என ஒரு கல்வி அமைச்சர். முன்னாள் பொருளியல் ஆசிரியர் கூறுகின்றார் என்றால் அதில்
ஏதோ அர்த்தம் இருக்கத்தான் செய்யும் என அனைவரும் புரிந்து கொள்ள் வேண்டும். அதை விட்டு
அவரை கேலி செய்வது, 7500 க்கு அவரை குடும்பம் நடத்த சொல்றது எல்லாம் நாகரீகம் அல்ல.
7500 ரூபாய்க்கு
மாசத்தினை ஒட்ட அவர் என்ன நம்மை போல சாதாரண, வேலையற்ற நாட்டுக் குடிமகனா? இலங்கையின்
அரச எந்திரத்தின் முக்கிய கடையாணி அவர். அதோடு அவருக்கு எத்தனையோ ராச காரியங்கள் இருக்கும்…
இருக்கட்டும்! அமைச்சர்
சொன்ன 7500 ரூபாய்க்குள் எப்படி ஒரு மாத்தத்தினை ஓட்டுவது எனப்பார்ப்போம்.
- குடும்ப உறுப்பினர்கள் : 3 பேர்
- மூன்று வேளை உணவாக பாண் ( Bread ) மாத்திரம் உண்ண வேண்டும். பாண் தொண்டைக்குள் சிக்கினால் தண்ணி குடிக்கலாம் அதுவும் கிணற்று தண்ணீர்.
- ஒரு வேளைக்கு ஒரு நபருக்கு : ½ பாண்
- மூன்று வேளைக்கு ஒரு நபருக்கு (3 x ½ ) : 1½ பாண்,
- மூன்று பேருக்கு ஒரு நாளைக்கு (1½ x 3 ) : 4½ பாண் தேவை.
- ஒரு பாணுக்கு 55.00 ரூபாய்கள்.
- ஒரு நாளைக்கு (55.00 x 4½) : 247.50 ரூபாய்கள் தேவை.
- 30 நாட்களுக்கு ( 247.5 x 30 ) 7,425.00 ரூபாய்கள்.
- ஆகவே உணவுக்கான மொத்த செலவு : 7,425.00 ரூபாய்கள்
- மீதி உள்ள 75.00 ரூபாய்களில் நீங்கள் 25.00 ரூபாய்களை சேமித்து கொள்ளலாம். மீதி 50.00 ரூபாய்களை ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மாதத்தில் 31 நாள்
வந்தால் என்ன செய்வது என நீங்கள் கேட்டால், நான் சுலபமாக அமைச்சர் அதைப்பற்றி சொல்லவில்லை
என சொல்லலாம். ஆனால், எனது தனிப்பட்ட ஆலோசனை. அன்றைய நாளை விரதமிருந்து முடித்துக்
கொண்டால், நன்மைக்கு நன்மையுமாச்சு! நாளும் கழிஞ்சிடும்.
இனி இலங்கையும்
வல்லரசுதான்……………….
No comments:
Post a Comment