சிறுகூடல் பட்டியில் சாத்தப்பன் விசாலாட்சி தம்பதி பெற்றெடுத்த தமிழ் முத்தையா அவன் முத்தையா. பின்னர் கண்ணதாசனாகி கவியரசனாகி, இன்னும் தமிழ் மனங்களில் நிறைந்து நிற்கும் அம்மார்க்கண்டேயனுக்கு இன்று 83 வது பிறந்த தினம்.
“ கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.. “ என்ற கட்டியத்துடன் ஆரம்பித்த கவியரசரின் திரையிசை வாழ்க்கை. அதிலிருந்து கொஞ்சமும் பிசகவில்லை. இன்னும் எத்தனையோ ரசிகர்களினை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும், அவரின் பாடல்கள் பற்றி அவர் அறிந்ததால்தானோ என்னவோ,
“ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.” என பாடிச்சென்றான்.
இலகுவான வார்த்தைகளில் ஆழமான தத்துவ விசாரங்களினை படைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். அதுதான் அவரை உழைப்பாளி வர்க்கத்திற்கும் கொண்டு சேர்த்தது.
“பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு,
புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால்-
அவன்தான் இறைவன்.”
என்ற பாடலின் நெடுநாளைய காதலன் நான். எவ்வளவு எளிமையான வரிகள்! ஆனால் அதன் அர்த்தங்கள். எதையெல்லாம் தொட்டு நிற்கின்றன.
சொல்ல சொல்ல இனிக்கும் பாடல்களும் சுவாரசியங்களும் நிறைந்த ஒரு புதையல் அவர். எப்போதும் அவரின் பிறந்த நாளினையே நான் கொண்டாடுகின்றேன். அவரின் மறைவு பற்றி எனக்கு தெரியாது.
“ படைப்பதனால் என் பெயர் இறைவன்” என பிரகடனம் செய்தவன் அவன்.
அந்நிரந்தரமானவனுக்கு, இந்த ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.