Sunday, December 23, 2012

ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்கே!

முழுவதும் மீசை ,தாடி , கர கர என குரல்கள் என கேட்டுக் கொண்டிருந்த எங்களது அலுவலகத்திற்கு புதிதாக ஒரு குயில் கூவ வந்திருந்தது. ஆகா……. இருந்த வாலிப வயோதிப அன்பர்கள் அனைவருக்கும் ஏக குஷி! அது ஏனோ தெரியவில்லை. பால் ஈர்ப்பு என்பது எப்போதும் ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமோ என பல தடவைகளில் எண்ணியதுண்டு. 

அவள் – 25 வயதுக்குள் இருக்கும். அழகியும் இல்லை, சுமாராகவும் இல்லை. பொறுத்துக் கொள்ளலாம் ;).  இருப்புக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு (Inventory Control) வந்திருந்தாள் – மும்பையை சேர்ந்தவள். நுனி நாக்கு ஆங்கிலமும், அதிகாரமும் கொஞ்சம் தூக்கலாக இருந்தன. ஆனாலும், ரசிகர்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. அதிலும், சிலர் தீவிர விசிறியாக அல்லது விசிறியாக்கப்பட்டிருந்தனர்.  அந்த தீவிர விசிறிக்கூட்டத்தில் ஒருவர் எனது நண்பர். நண்பர் காணும் போதெல்லாம், அவளைப்பற்றிய துதிபாடல்களை பாடிக்கொண்டே இருந்தார். அதற்கு இன்னும் ஒரு காரணம் அவளின் மேசைக்கு பக்கத்து மேசைக்காரர் நண்பர். இது எங்கு போய் முடியப்போகின்றதோ என்ற எண்ணம் எனக்கு. 

கடந்த சிலவாரங்களில் நண்பரிடம் துதி குறைந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்ததில் முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கதைக்க சந்த்தர்ப்பம் பார்த்திருக்கும் நண்பர் இப்போது சுவாரசியம் இன்றி இருப்பதும் புரிந்தது. ஆச்சரியம்! என்னவென்று கேட்டுவிடவேண்டும். ! பணி முடிந்து போகும் போது மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

“பிறகு எப்படி போகுது கரெனுடனான வேலைகள்?” என்றவாறு கண்ணடித்தேன். ( அவள் பெயர் - கரென்)

நண்பர் கொஞ்சம் பதட்டப்பட்டது போல பிரமை தட்டியது. சுதாரித்துக் கொண்டே,, 

“இல்லை ச்சும்மாதான் கேட்டேன்” என்றேன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவர், கொஞ்ச குழப்பமான முகத்துடன் என்னை உற்றுப் பார்த்தார். எதையோ சொல்ல முயற்சித்து முடியாமல் விழுங்குகின்றர் என விளங்கியது.

அதோடு அதை முடித்துவிட்டு நகரத்தொடங்கினோம். 
கொஞ்சநேரத்தின் பின் ஏதோ விழித்துக் கொண்டவர் போல,

“ அவள் எப்போதும் பெர்பியூமுடனே திரிகின்றாள்” என்றார்.

இப்போதுதான் கதையினை ஆரம்பிக்கின்றார் என எண்ணிக்கொண்டு மெதுவாக திரும்பிப்பார்த்தேன். 

“அதனாலென்ன? , அவள் நாகரீகமான பெண். அதானால் இருக்கும்”  இது நான். 

சொல்லிமுடிக்கு முன்,, “ ஆனால் உடுத்திருக்கும் ஜீன்ஸ் க்கு எதற்கு பெர்பியூம்?” சடாரென அவரிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் குழம்பினேன்.

அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் ஒருவித விசமம் பரவிக்கிடந்தது.
திடீரென பல்ப் எரிந்தது. இதழோரத்தில் புன்னகை ஒன்று எட்டிநிற்க அவரைப்பார்த்தேன். எனக்காக காத்திருந்தவர் போல பெரும் சத்தத்துடன் சிரிக்க தொடங்கினார். நானும் கலந்து கொண்டேன்…

இப்போதெல்லாம், பெர்பியூம் விசிறும் சத்தங்கள் – புன்னகையினை தந்து கொண்டிருக்கின்றன ;)

Monday, August 27, 2012

பேஸ்புக்கில் கலக்கும் சூப்ப்ர ஸ்டார்!


என்ன ஆச்சரியமாக இருக்குதா? உண்மைதான். நம்ம தலைவரின் ஸ்டைலினை வைத்து நிறைய கெப்ஸன்கள் இப்போது பேஸ்புக்கில் வலம் வர ஆரம்பித்துள்ளன. எல்லாம் ரசிக்கும் படி உள்ளதோடு. நகைச்சுவையாகவும் இருக்கின்றன.

தலைவா!! YOU ARE GREAT……..

எனக்கு பிடித்த சில உங்கள் பார்வைக்கு..

  • கண்ணா உன்னால முடியாது. ரொம்ப வாலாட்டினா அமெரிக்கா கூட ஜூஜூபி....


  • இது ச்சும்மா!! பொரி உருண்டைக்கு...டோன்ட் டச்!!

  • அது என் நாய் புரியுதா?

Saturday, August 18, 2012

விஜய் டீவியின் ஜூனியர் சுப்பர் சிங்கர் : முன்தீர்மானங்களுடன் நகர்கின்றதா? ( எனது பார்வையில் )

அழுதுவடிக்கும் சீரியல் கொடுமைகளை தாண்டி விஜய் டீவி வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை தருவதால் அதன் நிகழ்ச்சிகளில் எப்போதும் பரீட்சயம் உண்டு. முக்கியமாக – ஜூனியர் சுப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா?

இரு நிகழ்ச்சிகளும் முன்பிருந்ததை விட தற்போது வேறுபாதையில் செல்வது போல இதன் நெடுங்கால பார்வையாளர்களுக்கு தோன்றக்கூடிய சாத்தியங்கள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன. அத்லும் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3  ன் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சி மீதான எனது தனிப்பட்ட பற்றினை குறைத்துக் கொண்டே வருவதாக படுகின்றது. இது என்னைப் போன்ற பலரின் கருத்தாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

டொப் 10 போட்டியாளர்கள் தற்போது  7 ஆக குறைந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படுகின்ற போட்டியாளர்கள் இருப்பவர்களை விட சிறப்பாக பாடக் கூடியவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • -          ஆஜித்
  • -          ரக்சிதா
  • -          செபி
  • -          அகிலேஷ் போன்ற
நல்ல திறமை உள்ள குழந்தைகள் தட்டிக்கழிக்கப்பட்டு யாரோ ஒருவருக்காக இப்போது இந்நிகழ்ச்சி கொண்டு செல்லப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.

ஆஜித் – அந்த சிறுவன் பாடுவது மட்டுமல்ல அவனது ஸ்டைல் அங்க சைஅவுகள் என அனித்தும் ரசிக்கும் படி இருக்கும். தனிப்பட்ட வகையில் எனக்கு மிக பிடித்த இவன் நடுவர்களால் போட்டியிலிருந்து வெளியாற்றப்பட்டதற்கு காரணம் பாடல் வரிகள் மற்ந்து போனதே!  பாடுகின்ற திறமை என்பது குரல்வளம், மற்றும் இன்ன பிற சங்கீதத்துடன் தொடர்பான சமாச்சாரங்கள்தானே அதில் மனனமும் வருகின்றதா? என்ற கேள்வி, இவனது வெளியேற்றத்தின் போது எனக்குள் எழுந்தது. அதேவேளை, பாடும் போது வரி மறந்து மூச்சுவிட்டு பாடிய அஞ்சனா இன்னும் போட்டியில்! ஆஜித்தின் “போ நீ போ..” பாடல் இன்னும் இந்நிகழ்ச்சியில் ஒரு மகுடம். ஆனால் அவன் இன்று போட்டியில் இல்லை!




அதே போல ரக்சிதா! சிறப்பாக பாடிய சிறுமி. இன்று போட்டியில் இல்லை. சொல்லப்படுகின்ற காரணம் ½ மார்க் கம்மியாம்! டொப் 10 க்குள் வரக் கூடிய அனைத்து திறமையும் தகுதியும் இருந்தும் செபிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. தட்டையாக பாடிக்கொண்டிருக்கும் கவுதம் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். கௌதத்துடன் ஒப்பிடும் போது ஆஜித் எவ்வளவோ திறமைசாலி!

அகிலேஷ் – மேடைக் கூச்சமற்ற சிறுவன். அவனது பாடல்களில் தெரிகின்ற உற்சாகம் வேறு யார் பாடும் போதும் வருவதில்லை. அவன் வெளியேற்றப்பட்டமைக்கும் நடுவர்கள் எதையோ காரணமாக சப்பைக் கட்டு கட்டினர்.

இப்போது உள்ள போட்டியாளர்களில், நடுவர்களின் அருள் பார்வை எப்போதும் ஒருவரை நோக்கியே இருக்கின்றது. அது பிரகதி.  அவருக்கு சாக்லேட் அடைமழையாக பொழிகின்றது. அதோடு மட்டும் நின்றுவிடாமல் பாராட்டு மழை. அப்ப்ப்ப்ப்ப்ப்பா!!  நடுவர்கள் - அவரை மட்டும் பாராட்டுவதோடு நிற்காமல் அவரது அம்மாவையும் பாராட்டி தள்ளுகின்றார்கள். இது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது, சுப்பர் சிங்கரில் மற்ற குழந்தைகள் பிரதான நிகழ்ச்சிக்கு வருமுன்னர் பல்வேறு தடகளை தாண்ட வேண்டி இருக்க, இவர் மட்டும் திடீரென சுப்பர் சிங்கருக்குள் முளைத்தார். அதாவது எந்தவித முதற்கட்ட சோதனைகளும் இன்றி.. அன்றிலிருந்து இன்று வரை இவருக்கான இடத்தினை நடுவர்கள் எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றனர், இது நடுவர்கள் மட்டுமன்றி இந்த நிகழ்ச்சி மீதான நடுநிலையினைப் பற்றிய கேள்வியிஅனி எழுப்புகின்றது. இவருக்கு மட்டுமான முன்னுரிமைக்கு என்ன காரணம்? நடுவர்கள் வாய்கிழிய புகழும் அளவிற்கு இவரிடம் பாடும் திறமை உள்ளதா??

தற்போது உள்ளதில் யாழினி மற்றும் சுகன்யாவுடன் ஜெயந்த் ஆகியோர் இறுதிச்சுற்று வரை செல்லும் தகுதியுடன் தெரிகின்றனர். ஆனாலும் யாழினியின் திறமைகள் நடுவர்களால் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் அவர்களின் கருத்துக்கள், அடிக்கடி அந்த்க்குழந்தை டேஞ்சர் சோனுக்குள் வருவதை வைத்து எண்ண தோன்றுகின்றது.

இப்போது இந்நிகழ்ச்சி – முன்மொழியப்பட்ட யாரோ ஒருவருக்கு ஜூனியர் சுப்பர் சிங்கர் பட்டத்தினை கொடுக்க நடாத்தப்படுகின்ற ஒரு செட்டப் கேம் போலவே எனது பார்வைக்கு படுகின்றது.



Thursday, August 09, 2012

ஆளில்லா கடையில் டீ ஆத்த நடைபெறும் சண்டைகள் : மாகாண சபைத் தேர்தல் எனது பார்வையில்


தேர்தல் என்றால் ஒருவித திருவிழா மனநிலையே பெரும்பாலான நம்மவர்களிடம் காணப்படுகின்றது. அதற்கு காரணம் என எனக்கு தோன்றுவது. மாறி மாறி வாரி இறைக்கப்படும் அவதூறுகள கேட்பதில் உள்ள ஆர்வமும் வேடிக்கை பார்க்கும் மனநிலையும்தான். இது தவிர்த்து எமக்குள் இன்னும் பரவலான ஒரு அரசியல் பார்வை வந்துவிடவில்லை.

சிலர் ஏற்கனவே முடிவெடுத்து வைத்துவிட்ட வேட்பாளருக்கான வாக்கை இடுகின்றனர். இது அவர்களின் கொள்கைகளுக்கோ கட்சிப்பற்றுதலோ அல்லாமல் அதையும் தாண்டி இன்னபிற தேவைகளாக இருக்கலாம். மேலும் சிலர் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானம் இன்றி இடுகின்றனர்.  எப்படி பார்த்தாலும் இனம், சமூகம் சார் கொள்கைகள் அபிவிருத்தி மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களுக்காக வாக்களிப்பதும் அதை முன்னிறுத்தி வேட்பாளர்கள் வாக்கு கேட்பதும் இப்போது மிக குறைந்தே விட்டது. அதற்கான அரசியல் நாகரீகத்திற்குள் நாம் நுழைய இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம்.

மாற்றுக்கட்ட்சி / கருத்தினரி மதிப்பதோ அவர்களின் விவாதங்களுக்கு குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பதற்கோ எந்த ஒரு தரப்பும் தயாராக இல்லை. அதற்கு பதிலாக அனைவரும் கையில் எடுப்பது வன்முறையும் அவதூறுகளும்தான். இதன் போது தமது கொள்கைகள் மற்றும் தமது அபிவிருத்தி மற்றும் ஏனைய திட்டங்கள் பற்றிய விளக்கங்களை வசதியாக அனைத்து தரப்பு வேட்பாளர்களும் மறந்து விடுகின்றனர். அதனை வாக்காளரகளும் பெரிதாக இப்போது அலட்டிக் கொள்வதில்லை. தேர்தல் என்பது அவர்களை பொறுத்த வரையில் ஒரு திருவிழா போல.. முடிந்ததும் வென்றவர்கள் அவர்களின் பணிகளை பார்க்க போய்விடுவார்கள் நாம் நமது கவலைகளுடன் இருக்க வேண்டியதுதான்.

தேர்தல் கால வாக்குறுதிகள் பற்றிய எமது மதிப்பீடு உலகறிந்த ரகசியம். அதன் ஆயுள் தேர்தல் முடியும் வரை மட்டுமே. ஆனாலும் நாம் அதை அறிவதில் ஆர்வத்துடன்தான் இருக்கின்றோம். ஆனால் இப்போது நடைபெறுகின்ற மாகாண சபைத்தேர்தலில் வாக்குறுதிகள் குறைவாகவே இருக்கின்றது. இருந்தும் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை.

முஸ்லிம்கள் மீதான் நெருக்குவாரங்கள் கூடி உள்ள இத்தருணத்தில் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் உணர்வுரீதியிலான ஒரு உந்தலுக்கு மக்களை தள்ளுவதில் முனைப்பாக இருக்கின்றது. இதில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் சிறப்பாகவே பங்கெடுக்கின்றனர்.! ஈழத்தமிழர் விவகாரம் எப்படி தமிழக அரசியல்வாதிகளுக்கான திருவோடு போல இருக்கின்றதோ, அதிலிருந்து கொஞ்சமும் குறையாத வகையில் பள்ளி ஆக்கிரமிப்பு விவகாரம் மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சிகளால் கையாளப்படுகின்றது.

பள்ளிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் அதை எதிர்ப்பதாகவும் முஸ்லிம்கள் தமது வாக்குகளை தமக்கே இடவேண்டும் என்று பிராச்சாரம் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் - மத்தியில் இன்னும் ஆளும் கட்சியின் கூட்டாளியாகவே இருக்கின்றது, இதோடு நில்லாமல் மாகண்சபை தேர்தலின் பின் அரசுடனே கூட்டு வைக்கப்போவதாகவும் அறிவித்திருக்கின்றது. நடைபெறுகின்ற பள்ளி ஆக்கிரமிப்பிற்கு அரசே காரணம் என குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசுடன் இணைந்தே இருப்போம் அவர்களையே தொடர்ந்து ஆதரிப்போம் என கூறுகின்ற அரசியல் சாணாக்கியம் எந்த வகையில் சாரும் என எனக்கு தோன்றவில்லை.  இது மக்களை உணர்ச்சிவயப்படுத்தி வாக்குகளை பெற மேற்கொள்ளப்படுகின்ற வியாபர யுக்தி போன்றே தெரிகின்றது.

மறுபக்கம் அதே பள்ளிகள் மீதான தாக்குதல்களுக்கும் அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என நிரூபிக்க பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் ஆளும் தரப்பு முஸ்லிம் கட்சிகள். தாக்குதல் நடைபெற்ற காலங்களில் எல்லாம் மௌனியாக இருந்த அமைச்சர் அதா உல்லா தற்போது அது தொடர்பில் வாயினை திறந்துள்ளார். அதுவும் தேர்தலுக்காக. எதிரணியினர் இதை வைத்து நிறைய வாக்குகளை பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும்.

மற்றொரு புறம் இத்தேர்தல் பலருக்கு தமது அரசியல் ஸ்திரத்தினை உறுதிப்படுத்த ஒர் களமாக இருக்கின்றது. கொள்கைகள் சமூக நோக்கு என்பனவற்றை பின்தள்ளி, இன்ரு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முன் நிற்பது இதுதான் என அடித்துக் கூறலாம். அதற்கு வாக்காளர்கள் எனும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சந்தைப்படுத்தல் யுக்திகளும் விளம்பரங்களும் வெவ்வேறு வடிவங்களில் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வளவு களேபரங்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற இம்மாகாண சபைத் தேர்தல் அந்தளவிற்கு முக்கியமானதா என்ற கேள்விக்கு விடை தேடி சென்றால். கிடைப்பெதன்னவோ இல்லை என்றுதான்.

13வது யாப்புச் சீர்திருத்ததின் பிரகாரம் கொணரப்பட்ட இந்த மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே முதலில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பிரச்சினைக்குரிய இரு மாகாணங்களிலும்  இம்முறைமை வெற்றியளிக்கவில்லை. பெரிதாக இப் 13 வது சீர்திருத்தத்தில் பிரஸ்தாபிக்கப்படும் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படாமை பெரியளவில் பேசப்பட்டாலும் மற்றொரு தரப்பில் அவ்வதிகாரங்கள் கூட வெவ்வேறு வழிகளில் ஜனாதிபதியினால் கட்டுப்படுத்தப்படக்குட்டிய சரத்துக்களை கொண்டிருப்பதால், அதை மாகாணசபைகள் பெற்றாலும் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்று விளக்குகின்றனர். அது ஒரு வகையில் உண்மையே!

13வது சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்கள் தொடர்பான சரத்துக்கள் பின்வருமாறு உள்ளன
  1. அரச காணிகள் – இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான காணிகள் எவ்வித மட்டுப்பாடுமின்றி தேசிய அரசாங்கம் பயன்படுத்தும்.
  2. மாகாண சபை காணிகள் – மாகாண சபைகளின் நோக்கங்களுக்காக தேவைப்படும் காணிகளை பெறுவது தொடர்பாக இது விளக்குகின்றது. அதாவது, மாகாண சபைகளின் தேவைக்காக பயன்படும் காணிகளின் பயன்பாட்டுத் திட்டம் தேசிய கொள்கைக்கு இணங்க உருவாக்கப்பட வேண்டியது மாகாண சபைகளின் முதன்மைப் பணியாகும். இவ்வாறான திட்டங்களில் காணியை பயன்படுத்துவதற்கான மதியுரையினை ஜனாதிபதியே வழங்குவார்
  3. அரச காணிகளின் பயன்பாடு தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதற்கான அதிகாரம் கொண்டுள்ள, ஒரு தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்படல் வேண்டும்
  4. மாகாணங்களுக்கிடையிலான நீர்ப்பாசன, காணி அபிவிருத்தித் திட்டங்கள் – இதன் கீழ் முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய அரசாங்கத்தாலே நிறைவேற்றப்படும். உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டம் அரசாங்கத்தின் தேசிய திட்டமாகவே இருக்கும். இத்திட்டத்தின் மூலம் காணியையும், காணிகளைப் பெறவிருப்போரையும் தெரிவு செய்வதற்கான தத்துவங்களை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ளும். இவற்றை நடைமுறைப்படுத்தும் பங்கினை மாகாண சபைகள் மேற்கொள்ளும். குறிப்பாக, காணி தேவையானோரை இனங்கண்டு தெரிவுசெய்யும் பணி மாத்திரம் மாகாண சபைக்கு வழங்கப்படுள்ளது
இச்சரத்துக்கள் எழுத்தில் இருந்தாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. வந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை என்பதும் இச்சரத்துக்கள் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே மாகாணசபை என்பது அதிகாரங்களற்ற ஒரு அமைப்பு பெயரளவிலான இந்த சபைக்கான தேர்தல் அதன் உரிய நோக்கத்தினை புறக்கணித்து இன்ன பிற தேவைகளுக்காகவும் , பலரின் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்காகவும் பெரிய ஒரு விடயமாகவும், சிறுபான்மை மக்களின் இருத்தல் மற்றும் உரிமைகளுக்கான ஒரு வாய்ப்பாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது. ஆனால் இது ஒன்றும் நடைபெற போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும் அதற்கு கலைந்த கிழக்கு மாகாண சபையே சாட்சி.

ஆனாலும் நாம் சண்டை இட்டுக் கொண்டிருக்கின்றோம் ஆளில்லா கடையில் டீ ஆத்த!

Sunday, July 01, 2012

வித்தியாசமான விளம்பரம் : தமிழை தமிழுக்கு மொழிபெயருங்கள்



கீழுள்ள விளம்பரம், இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளி வந்த வேலை வாய்ப்புக்கான அறிவித்தல். இதில் உள்ளது புரிகிறதா என முகப் புத்தகத்தில் நண்பர் ஒருவர் வினவினார். முயற்சி செய்து தமிழை தமிழுக்கே மொழி பெயர்த்திருக்கின்றேன். பாருங்கள்.

தமிழை தமிழுக்கே மொழிபெயர்த்த முதல் ஆள் நான்தான் என நாளைய வரலாறு சொல்லட்டும். 


மேல் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபை
வேலைத் திட்ட அதிகாரி பதவிக்காக இணைத்துக் கொள்ளல்.

  •  காகித கைக்குட்டை உற்பத்தி தொடர்பான பயிற்சியையும், அனுபவத்தையும் பெற்றிருத்தல்.

  • காகித கைக்குட்டை உற்பத்திக்கான இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அறிவும் அனுபவத்தினையும் கொண்டிருத்தல்.

  • காகித கைக்குட்டைகளை மூலப் பொருளாக கொண்ட உற்பத்திகளை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அது தொடர்பான பயிற்சி அளிக்கும் திறனை கொண்டிருத்தல்.

  • கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும். விஞ்ஞான பாடம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும்.

  • சிறந்த சுக தேகியாக இருத்தல் 


உங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை சுயவிபரக் கோவையுடன் இணைத்து
2012.06.21 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் காட்டப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

தலைவர் : மேல் மாகாண கைத் தொழில் அபிவிருத்தி சபை, காகித கைக்குட்டை திட்டம். இலக்கம் :4 தசாரத மாவத்தை, கொட்டாவ, நுகேகொடை.

தொடர்புகளுக்கு : 0114936121. 0716037430

( எப்பா!!!!!!!!!! ஆப்பிள் ஜூஸ் ஒன்னு சொல்லுப்பா.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..)


Saturday, June 30, 2012

விகாரமாகிக் கொண்டிருக்கும் மனிதமும். மனதுகளும்.



பாலர் வகுப்பிலிருந்து படித்து வந்த வாழ்க்கை சமூகம் பற்றிய கற்பிதங்கள், நிஜமான உலகில் பிரவேசித்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகின்றது. அதிலும் இன்றிருக்கும் நிலை இன்னும் பயமாக இருக்கின்றது. மனங்களின் விகாரங்கள் காலையில் கண் விழித்ததில் இருந்து பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டே இருக்கின்றன.

செய்திகளை புரட்டினால், மனசு இன்னும் சுருங்கிப் போய் இருக்கும் கவலைகளுடன் உலகம் பற்றிய சிறிய ஒரு வருத்தமும் தொற்றுவதை தவிர்க்க இயலவில்லை. அந்த வருத்தமும் சொந்த கவலை ஒன்று வரும்போது இல்லாமலே போய் விடும்.

மரணம் பற்றிய எமது நிலை இன்று வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. நான் சாவிற்கு அஞ்சுபவனில்லை என்பது வீரமா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் நிறைய உண்டு. மரணத்திற்கு நீ அஞ்ச வேண்டும். நித்தியமாக நாம் யாரும் வாழ வரவில்லை. நாள் குறிப்பிடாமல் நிச்சயிக்கப்பட்ட மரணம் எங்கோ எமது வழிப்பயணத்தில் எம்மை சந்திக்கலாம். நமக்கும் அதற்குமான தூரம் பற்றி எந்த ஒரு தகவலும் எம்மிடம் இல்லை. இதோ நான் கூட அதை அண்மித்திருக்கலாம். யாரறிவார்?
     “ என் மரண நாட்காட்டியில் இன்றொரு நாள் கிழிக்கப்படுகின்றது”
என்று ஒரு கவிஞன் சொல்கின்றான். 

இதுதான் எமக்குள்ள வாழ்வு, எமது பயணம் நேராக செல்வது அதை நோக்கித்தான். செல்லுகின்ற வழிகளில் நாம் இறைத்துச் செல்வது நல்லவையாக இருக்கட்டுமே! அது நல்லவையாக இருக்க வேண்டும் என்றால் எமக்கு மரணம் பற்றிய பயம் இருக்க வேண்டும். என்றாவது அதை நான் சந்திப்பேன் என்ற நினைவு படுத்தல் இன்னும் நம்மை சீராக்கும் என்பது எனது எண்ணம்.

மரணத்திற்கான மரியாதையினை எப்போதும் நாம் கொடுக்க வேண்டியது அவசியம். அது – ஒரு சிறந்த ஆசான். ஒவ்வொரு மரணச் செய்திகளும் எமக்கான எச்சரிக்கை. இருக்கும் காலங்களில் நாம் செய்ய வேண்டிய சமூக கடமைகள் தொடர்பான அலாரம்.  

இன்றைய எமது இளம் தலைமுறையோ இது தொடர்பில் எவ்வகையான பார்வையினை கொண்டிருக்கின்றது என்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து புரிய கூடியதாக இருந்தது. அக்கரைப்பற்றில் நடந்த ஒரு கோர விபத்து ஒன்றில் பலியான சகோதரர் ஒருவரின் உடலினை விபத்து நடந்த இடத்தில் வைத்து படம் பிடித்து சமூக வலைத்தளங்கள் முழுவதும் நமது சகோதரர்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். எத்தனை கவலைக்குரிய விசயம்? மரணித்தவர் யாராக இருக்கட்டும். எப்படியாவது இருக்கட்டும். அதை படம் பிடித்து இணையத் தளங்களில் பரப்புகின்ற அளவிற்கு மனிதம் தொலைந்து விட்டதா? மார்க்கத்தை விடுங்கள் ஒரு மரணத்தினை எப்படி உள்வாங்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கின்றோமா? இது எத்தனை பயங்கரமான ஒரு சமிக்ஞை.

எங்கு என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது எமது உதிரத்தில் ஒட்டிய என்றாலும். இது போன்ற நிகழ்வுகளின் போது எம்மை நாமே கேள்வி கேட்டு கொள்ளாமல், புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்புகின்ற காரியங்களில் ஈடுபடுகின்றோமே! நம்மை என்ன பெயர் கொண்டு அழைப்பது நண்பர்களே?

மரணம் பற்றிய நினைவு நம்மிடத்தில் இல்லாமலே போய்விட்டது. அதற்கான ஊர்ஜிதங்களை இது போன்ற சம்பவங்களும் நமக்கு சொல்லிக் காட்டுகின்றன. இதற்காக ஒவ்வொரு நாளும் மரணத்தை எண்ணி அஞ்சி வாழ வேண்டியதில்லை. எனக்கும் உண்டு என்ற எண்ணத்தில் வாழ்ந்தாலே போதுமானது.

அந்த விபத்து தொடர்பான படங்களை இடுகின்ற போது, அதற்கு பேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் LIKE இடுகின்ற நண்பர்களின் மனநிலை பற்றி எண்ணுகின்ற போது இன்னும் ஒருவித அசூசை வந்து ஒட்டிக் கொள்கின்றது.

நண்பர்களே பயந்து கொள்ளுங்கள், வாழ்க்கை தருகின்ற பாடங்களுக்கான பரீட்சைத் தாள்களும் விடைகளும் மரணம் எனும் ஆசிரியர் கையிலேயே உள்ளது.

Tuesday, April 03, 2012

7500 ரூபாய்களில் குடும்பம் நடத்த அமைச்சரின் வழியில் ஒரு டிப்ஸ்


கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், 3 பேர் குடும்பம் ஒன்றுக்கு மாசத்திற்கான செலவுகளை மேற்கொள்ள 7500.00 இலங்கை ரூபாய்கள் போதும் என தெரிவித்த கருத்து இப்போது இலங்கையின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

விலைவாசி கிடு கிடு என ஏறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் 7500.00 ரூபாய்கள் மூன்று பேர் உள்ள குடும்பத்துக்கு போதும் என ஒரு கல்வி அமைச்சர். முன்னாள் பொருளியல் ஆசிரியர் கூறுகின்றார் என்றால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கத்தான் செய்யும் என அனைவரும் புரிந்து கொள்ள் வேண்டும். அதை விட்டு அவரை கேலி செய்வது, 7500 க்கு அவரை குடும்பம் நடத்த சொல்றது எல்லாம் நாகரீகம் அல்ல.

7500 ரூபாய்க்கு மாசத்தினை ஒட்ட அவர் என்ன நம்மை போல சாதாரண, வேலையற்ற நாட்டுக் குடிமகனா? இலங்கையின் அரச எந்திரத்தின் முக்கிய கடையாணி அவர். அதோடு அவருக்கு எத்தனையோ ராச காரியங்கள் இருக்கும்…

இருக்கட்டும்! அமைச்சர் சொன்ன 7500 ரூபாய்க்குள் எப்படி ஒரு மாத்தத்தினை ஓட்டுவது எனப்பார்ப்போம்.
  • குடும்ப உறுப்பினர்கள் : 3 பேர்
  • மூன்று வேளை உணவாக பாண் ( Bread ) மாத்திரம் உண்ண வேண்டும். பாண் தொண்டைக்குள் சிக்கினால் தண்ணி குடிக்கலாம் அதுவும் கிணற்று தண்ணீர்.

  1. ஒரு வேளைக்கு ஒரு நபருக்கு : ½ பாண்
  2. மூன்று வேளைக்கு ஒரு நபருக்கு (3 x ½ ) : 1½ பாண், 
  3. மூன்று பேருக்கு ஒரு நாளைக்கு (1½ x 3 ) : 4½ பாண் தேவை.
  4. ஒரு பாணுக்கு 55.00 ரூபாய்கள்.
  5. ஒரு நாளைக்கு (55.00 x 4½) : 247.50 ரூபாய்கள் தேவை.
  6. 30 நாட்களுக்கு ( 247.5 x 30 ) 7,425.00 ரூபாய்கள்.
  7. ஆகவே உணவுக்கான மொத்த செலவு : 7,425.00 ரூபாய்கள்
  8. மீதி உள்ள 75.00 ரூபாய்களில் நீங்கள் 25.00 ரூபாய்களை சேமித்து கொள்ளலாம். மீதி 50.00 ரூபாய்களை ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாதத்தில் 31 நாள் வந்தால் என்ன செய்வது என நீங்கள் கேட்டால், நான் சுலபமாக அமைச்சர் அதைப்பற்றி சொல்லவில்லை என சொல்லலாம். ஆனால், எனது தனிப்பட்ட ஆலோசனை. அன்றைய நாளை விரதமிருந்து முடித்துக் கொண்டால், நன்மைக்கு நன்மையுமாச்சு! நாளும் கழிஞ்சிடும்.

இனி இலங்கையும் வல்லரசுதான்………………. 

Thursday, March 01, 2012

மூங்கிலால் செய்த பரண்கள்..



எப்போதும் போல் இன்னும் நிறைகின்றது
பரணின் மீதான பாரங்கள்.
இறக்கி வைக்கும் ஒன்றினை தாண்டி,
ஏறும் எண்ணிக்கை மடங்காகி போக.
எப்போதும் அது தன்னை கிள்ளிக் கொள்ளும்
எப்போதும் அது சிரித்துக் கொள்ளும்
இன்னும் உடையாமல் இருப்பதை எண்ணி.
பாரங்கள் பற்றிய கவலைகள் ஒரு போதும் தீண்டாதிருக்க,
கனவுகளோடு பேசிக்கொள்ளும்.

கனதி தாங்கி வளையும் பரண்கள்
இன்னும் சுமப்பதையே சிந்திக்கின்றன.
உடைகின்ற வலிமை அதற்கில்லை என்ற,
பாரங்களின் நம்பிக்கை ஒரு போதும் பொய்ப்பதில்லை.
மூங்கிலாய் மாறுகின்ற பரண்களை எப்போதும்
அவன் சுமப்பவர்களுக்கே தருகின்றான்.

அனைத்துக்கும் நன்றி அவனுக்கும்,
அது சுமக்கும் சுமைகளுக்கும்.







நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி!!! கேள்விகள் இதோ!


நம்மவர்களுக்கு ஒலக அறிவு மத்த அறிவு என என்னென்ன அறிவு இருக்கோ எல்லா அறிவையும் தட்டி கொட்டி கொட்டி தொறந்து பார்க்க நம்ம சூர்யா குதிச்சிருக்காரு. என்னா கேள்வி!! என்னா கேள்வி!! ச்சும்மா பார்க்கும் போதே புல்லரிக்குதே!

இனி ஒவ்வொரு தமிழனும் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தோடதான் உலாவ வரும் போல கிடக்கு. என்னவோ போடா மாதவா!!!!

ஆரம்பிக்கும் போது கொடுத்த பில்டப்பு எல்லாம் டப்புக்குத்தான்னு இப்பதானே புரியுது. பைசாதான் மேட்டர் னாலும் அதுக்கு இப்படியா மொளகா அரைக்கிறது?

இது இன்னொரு வகையில் சூர்யாவின் மீது இருக்கின்ற அபிமானத்தை குறைத்துவிடுமோ என்றும் அஞ்சக்கிடக்கின்றது. சிகரம் அறக்கட்டளை” அது இது என ஒரு மாற்று பிம்பம் சூர்யா பற்றி இருக்கும் என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு. இந்நிகழ்ச்சி கொஞ்சம் அல்ல நிறைய அதிர்ச்சிதான்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – கவனமா கீழே உள்ள கேள்விகளைப் பார்த்து, விடைகளை சரியா தயார் பண்ணிக்கோங்கோ மக்கள்ஸ், விடை தெரியாட்டி, பக்கத்துல இருக்கிற லைப்ரரி/ வெப்சைட்/ என தேவையான எல்லா வளங்களையும் பயன்படுத்த தயங்க வேண்டாம். வாழ்த்துக்கள் இனி ஒரு கேடி.. சே!! Sorry… கோடி உங்களுக்குத்தான். ))


திரைப்படத்தின் பெயர் ஒழுங்கு படுத்த சொல்றாரு . இதுக்கு நீங்க பிரிட்டானிக்கா வால்யூம் மூணுல 7 வது சாப்டர ரெஃபர் பண்ணனும்


சே! இதுக்குத்தான் சொல்றது, அனிமல் ப்ளானட் பாரு .. பாரு ன்னு இப்ப கர்சிக்கிற எது ன்னு யாருக்கிட்ட கேப்பேன்!! எங்க பக்கத்து வீட்டு பொடிசு சொல்லுது - சிங்கம் னு. ம்ஹூம்... இத நம்ப நான் ஒன்னும் முட்டாப்பயலா? சூர்யா சாருக்கே தெரியல.. ஏன் அம்மாம் பெரிய விஜய் டீவிக்கே தெரியல இந்த பொடிசுக்கு தெரிஞ்சிருமாக்கும்!!


நாம எல்லாத்துலயும் சொதப்புவோம் னு இத கேட்டிருப்பனுகளோ, அஞ்சாவதா - மேற்கூறிய அனைத்தும் னு ஒரு ஆப்சன் வச்சிருக்கலாம்


என்னத்த சொல்ல!! எங்க ஊர்ல எல்லாம் கால் தீபாவளிதான் இப்பல்லாம். பெற்றோல் விற்கிற வெலைக்கு வெற என்ன செய்றதாம்!!


மெதுவடை ன்னு ஒரு பண்டிகை நாங்க கொண்டார்ரோம் சார் ! இது சலாமியா தேசத்துல வருசத்துல ஒவ்வொரு மாசமும் நடக்கும்.





கேள்விகளை கவனமா பார்த்து விடைகளை அவசரம் இல்லாம நிதானமா கண்டுபிடிங்கோ மக்கள்ஸ்!