Thursday, March 01, 2012

மூங்கிலால் செய்த பரண்கள்..



எப்போதும் போல் இன்னும் நிறைகின்றது
பரணின் மீதான பாரங்கள்.
இறக்கி வைக்கும் ஒன்றினை தாண்டி,
ஏறும் எண்ணிக்கை மடங்காகி போக.
எப்போதும் அது தன்னை கிள்ளிக் கொள்ளும்
எப்போதும் அது சிரித்துக் கொள்ளும்
இன்னும் உடையாமல் இருப்பதை எண்ணி.
பாரங்கள் பற்றிய கவலைகள் ஒரு போதும் தீண்டாதிருக்க,
கனவுகளோடு பேசிக்கொள்ளும்.

கனதி தாங்கி வளையும் பரண்கள்
இன்னும் சுமப்பதையே சிந்திக்கின்றன.
உடைகின்ற வலிமை அதற்கில்லை என்ற,
பாரங்களின் நம்பிக்கை ஒரு போதும் பொய்ப்பதில்லை.
மூங்கிலாய் மாறுகின்ற பரண்களை எப்போதும்
அவன் சுமப்பவர்களுக்கே தருகின்றான்.

அனைத்துக்கும் நன்றி அவனுக்கும்,
அது சுமக்கும் சுமைகளுக்கும்.