Sunday, August 08, 2010

நட்பின்றி உலகேது??

வாழ்க்கை நண்பர்களால் ஆனது. அது பாடசாலையில் தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு காலத்திற்கும் தொடர்ச்சியாகிக்கொண்டே இருக்கும். சிலர் எம் வாழ்க்கையின் சில கட்டங்களில் வந்து போவாஅர்கள். சிலர் தொடர்ச்சியாக வருவார்கள்.  பால்யம் முதல் இதுவரை நண்பர்கள் தொடர்போடு இருப்பது எவ்வளவு இனிமை.

மிக அண்மையில், எனது பாடசாலைத்தோழர்களில் ஒருவன் Face Book ல் எங்களது பாடசாலை நண்பர்கள் பலரினை ஒரு Album ஆக போட்டிருந்தான். பார்ப்பதற்கே மகிழ்வாக இருந்தது. சிலரினை 6 , 7 வருடத்தின் பின்னர் காண்கின்ற பாக்கியம் அவன் மூலம் கிடைத்தது. இன்னும் அந்த Album வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் மூலம் தொடர்பின்றி இருந்த பலரின் தொடர்பும் புதிப்பிக்கப்பட்டது.

உயர்தரம் முடிந்து எல்லோரும் பாடசாலை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணத்தில் ஆட்டோகிராப் எல்லோர் கைகளிலும்.
இது எல்லோருக்கும் இருக்கும் அனுபவம். இரண்டு மூன்று ஏடுகள் என அடுக்கி வைத்துக்கொண்டு, எல்லோரிடமும் வாங்கிக்கொள்வோம். அதில் அவனவன் எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதை எல்லாம் கிறுக்கி வைப்பான். முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், நக்கல் நையாண்டிகள். உணமையான பிரிவின் வேதனைகள். மன்னிப்புக்கள் என உணர்வின் கலவையாக இருக்கும். அதில் சில கிறுக்கல்கள் எப்போதும் நினைவில் நிற்பவையாக இருக்கும். எழுதியவர்களும்தான்.
அதில் எனது நண்பன் ஒருவன் எனக்கு எழுதிய ஒன்று இன்னும் எனக்குள் உள்ளது. நினைக்கும் போதே அது ஒரு ரம்யமான உணர்வினை தரும் , எனது நட்பினை உணர செய்யும். இதுதான் அது,
“பலரிடம் நட்புண்டு எனக்கு,
ஆனால்-நேசிக்கும் நட்பில்லை யாரிடமும்,
உன்னைத்தவிர………

இன்றும் எனக்கு மிக்க அண்மையில் உள்ள நண்பன் ஒருவனின் வாக்கு மூலம். இது நடந்தது 2001 ல் ஆனால் இன்னும் எனக்குள் அவ்வாசகம் ஓடிக்கொண்டே இருக்கின்றது என்றால் பாருங்கள்.

இது மட்டும் இல்லை இன்னும் நிறைய உண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், எனது பாடசாலை நண்பர்கள் பலர் இன்னும் எனது நட்பெல்லைக்குள்ளேதான் இருக்கின்றார்கள். எனது வெளிநாட்டு வாழ்க்கையில் கூட கூப்பிடு தூரத்தில்தான் பலரும்.  இது வரமல்லவா??? 

அதனால்தான் சொல்கின்றேன்

“நட்பின்றி உலகேது”