Saturday, May 08, 2010

மனசும் மண்ணாங்கட்டியும்




மனசும் மண்ணாங்கட்டியும்

உறவுகள் யாவும் செத்தே போயின,
துரோகம் கூறும் நட்புகளும்,
குற்றம் சொல்லும் காதலுமாய்.

யாரில் உன்னை திணிக்கப் போகிறாய்?
வேலையற்று,காத்திருந்து,கவலைப்பட்டு........
சே!
முட்டாளாகிப்போன நீ பற்றி
நான் இனிப் பாடப் போவதில்லை.

என் பேனா முனையில்
உலகம் சிருஸ்டித்த நீ பற்றி-இனி
நான் பாடப்போவதே இல்லை.

இழிந்த உன் உணர்வுகள் பற்றி
என்க்கேதும் அக்கறையில்லை.
ஏதுமற்றே போய்விட்டாய்.
எதற்குனக்கு உணர்வுகளின் மீதான அக்கறை?
விட்டுத்தொலை!
எல்லோரும் சாகடித்த ஒன்று பற்றி,
நீ வருந்துவதில் ஏதுமாகா!
மனசும் மண்ணாங்கட்டியும்.
__________________

ஓர் பார்வையும் பல கனவுகளும்


ஓர் பார்வையும் பல கனவுகளும்

உன் கண்களுடன்
என் காதல் பயணமும் ஆரம்பமாயிற்று.

என்றாவது புரிந்து கொள்வாயா?
ஓர் பார்வையினை யாசிக்கும்,
இவ் யாசகன் பற்றி....

என் கனவு தின்று வழும்
உன் ஞாபக குப்பைகள்
இடமின்றி வழிகின்றது.

ஏதாவது செய்யேன்....
என்னை ஏதாவது செய்யேன்....

ஒன்றும் இயலாது போனால்
சபித்து விடு
பார்வை இன்றி போகவென.............

நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,


நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,

நன்றி.
நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,
தொட்டுச்செல்லும் உன் பார்வைகளினை
இன்னும் நான் சேமிக்கிறேன்.
ஓர் சிறுவனைப் போல.....

பச்சை உடுத்தி,
பார்வைகளால் பந்தாடிப்போனாய்
மழையாகிப் போனேன்.
நன்றி நேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி

ஓர் துயரம் நோக்கி
நீ செலுத்துகின்ற எம் உறவுகளில்
இயலுமானவரை
நான் இனிமைகளை பொறுக்கி கொள்கிறேன்.
நீ இல்லா பொழுதுகளில்,
என் தொலைதல் நிறைவேறும் நாட்களில்,
உன் மகிழ்வுகளையும்
உன் பார்வைகளையும் எடுத்து பார்க்க....

நீளப்போகின்ற
என் தொலைதல்
உன்னை நீங்கி அல்ல.

ஓர் வழிகின்ற காதலின் பாத்திரமாகும் வரை
நான் காத்து கிடப்பேன்
உன் பார்வைகளையும்
நம் காதலையும் சுமந்து கொண்டு..............

ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..



ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

அன்புள்ள அம்மாவுக்கு,

நான் நலமாய் உள்ளேன். நீ எப்படி இருக்கின்றாய்?

நீ நலமாய் இருக்க மாட்டாய் என்பது எனக்குத்தெரியும் அதனால்த்தான் எப்படி இருக்கின்றாய் என கேட்டேன்.

நான் எப்போதும் நலமாய்த்தான் இருக்கின்றேன் இருந்திருக்கின்றேன் உன் தயவால்.. அதனால் எனது ஆரோக்கியத்துக்கு ஒன்ரும் குறைவில்லை.. ஆனாலும் உன்னை நினைத்தால்தான் தொண்டைவரி எதுவோ வந்து என்னை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது.

அம்மா, நீ இல்லாத ஒரு உலகில் இப்போது நான் ஓரளவு நான் வாழப் பழகிவிட்டேன்.. ஆனாலும் நீ இன்னும் அப்படி ஒன்று பற்றி சிந்திக்க மறுப்பது எனக்கு எப்போதும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருக்கின்றது. நான் ஒரு வேளை சுயநலமிக்க ஒருவனாக மாறிவிட்டேனோ என்ற சுய பச்சாதாபம் இப்போது என்னை அலைக்கழிக்கின்றது. அப்படியா அம்மா?. இப்போதும் நீ, ஏதும் பங்கிடும் போது எனக்கெனவும் எடுத்துவைப்பதாக என் தங்கைகள் சொல்லும் போது நீ எந்தளவு நானில்லா உலகொன்றினை நிராகரிக்கின்றாய் என்பதன் தீவிரம் எனக்கு புரிகின்றது.

ஆனாலும் இது நானோ நீயோ விரும்பி ஏற்ற ஒன்றல்ல. நிர்ப்பந்தம் என்னை இங்கே கொணர்ந்துவிட்டது அது உனக்கும் தெரியும் ஆனாலும் அதிலிருந்து மீள உனக்கு தெரிய வில்லை.

உனக்கு நான் எடுக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளின்போதும் உன் குரலின் நெகிழ்ச்சி என்னை உருக்கிவிடும். அப்போதெல்லாம் எல்லாவற்றையும் அள்ளி எறிந்துவிட்டு உன்னிடமே வந்துவிட வேண்டும் என்று எண்ணுவேன். ஆனாலும் அதன்பின்னான நிஜங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை.

நீ இன்னும் ஏன் என்னைப்பற்றி அதிகம் கவலை கொள்கின்றாய்? என அன்றொரு தரம் உன்னிடம் கேட்டேன். அதற்கு ஒரு சிரிப்புடன், “ போடா இவரு பெரிய ஆளு” என்றாய். எனக்கு அதற்கப்பால் சொல்ல ஒன்றும் இல்லை. ஒன்றும் மட்டும் புரிந்தது. நான் என்றும் உனக்கு ஒரு கைக்குழந்தையாக / ஒரு சிறுவனாகத்தான் இருக்கின்றேன். எனக்கும் அதுதான் வேண்டும்.

உன்னுடனான் ஒவ்வொரு உரையாடல்களும் எனக்கு முடியும் போது இதயம் கனத்து கண்கள் கசிந்த படியே முடிகின்றன. என் மீதான உன் விசாரணைகள் அதிகமாக இருக்காது. அவை அனேகமாக, “ என்ன சாப்பிட்டாய்?” ஒழுங்கா சாப்பிடுறாயா?” “உடம்ப பாத்துக்கோ” என சாப்பாடு பற்றியோ அல்லது, என் எதிர்காலம் பற்றிய உனது கவலைகளாகவோ , அல்லது நான் வருகின்ற நாள் பற்றிய உன் ஆவலாகவோ இருக்கும். இதையும் மீறி, உனது விசாரணைகள் ஒன்றினையும் நான் கேட்டில்லை. நீ சுகமாக இருக்கின்றாயா என நான் கேட்டால், உற்சாகக்குரலுடன் “ஆமாம்” என்பாய். அது பொய் என்பது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும். ஆனாலும் நீ மகிழ்வாய்த்தான் இருப்பதாக நானும் காட்டிக்கொள்வேன்.

உனக்கென நான் இதுவரை எதுவும் செய்யவில்லை என நான் ஒவ்வொருநாளும் குமைந்து கொண்டே இருக்கின்றேன். ஆனால் நீ சொல்லலாம் நான் வாங்கித்தந்த சேலைகள் , நகைகள் பற்றி.. அவை உனக்கான கைமாறுகளா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். வேறு உனக்கு என்ன செய்வது என்பது பற்றி இன்னும் எனக்கு குழப்பம் மட்டுமே எஞ்சியுள்ளது அம்மா.

நீ இப்போது எனது திருமணக்கவலைகளில் மூழ்கி உள்ளதாக என் தங்கைகள் என்னைக்கேலி செய்கின்றனர். அதை நான் வினவிய போது அதே கவலைகளுடன் நீ சொன்னாய், உன்ன எனக்கு பிறகு பாக்க ஒருத்தி தேவைதானே என்று. ஐயோ, எப்போதும் என்னையே நினைத்து உன்னை மறந்து போகின்றாயே. முதலில் உன்னைப்பார்த்துக்கொள் அதெல்லாம் இப்போது அவசியமில்லை என்ற என்னிடம் நீ இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. என்னிடம் வார்த்தைகளில்லை அம்மா..
இனி எனக்கும் எதுவும் வேண்டியதில்லை. உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.

ஆனாலும் உன்னிடம் ஒன்று சொல்லுகின்றேன்.. நீ ஒன்றும் கவலைப்படாதே, நான் உன்னை நோக்கி எனது நாட்களினை கடத்துகின்றேன். அதுவரையிலும் நீ காத்திரு..

ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
__________________

Thursday, May 06, 2010

தொக்கி நிற்கும் கனவுகள்


இன்னும் எதிலொன்றோ

தொக்கி நிற்கின்றது
என் கனவுகள்.
மை பூசி படர்ந்த
கருமைகளில்,
எதை தேடிப்பெறுவேன்?
தொக்கி நிற்கும்
என் கனவுகளை!
தொலைந்த வாழ்க்கையை!


அத்வைதமாகிப் போன
என் கனவுகளிற்கிடப்பட்ட
கடிவாளங்கள்
அருபமாகி,
எங்கோ நிற்கின்றன....
சிகரங்களை நோக்கி
நான் விரட்டிய கனவுகள்
கண்ணீருடன்,
அரூபமான கடிவாளங்களிடம்
சரணடைந்தே போயின.


கனவுகளின் மரணம்
காலத்தால் ஓர் பக்கம் நிகழ்த்தப்பட,
விளங்க முடியா தடைகளும்
கனவு தின்று
சீரழிந்தே போயின
என் சுயத்தையும்,
இன்னும்
என் எச்சங்களையும்....


கனவின்றி இயக்கமேது?
இன்னும்
நான் உறைந்தே போனேன்.
என்
நிஷ்டை கலைத்து,
கனவுகளை மீட்டுத்தர