Sunday, August 01, 2010

காலத்தினை விற்கும் ஒருவனின் நாள்

நீண்ட பகலொன்றின் ஆரம்பம் இன்று,
அதே கவலைகளுடன் எனது பயணம் ஆரம்பமானது
எதுவும் புதிதாய் இல்லை.
கடக்கின்ற மனிதர்கள் முதல்,
தானியம் தேடும் அப்புறாக்கள் வரை.
மேசை - தாள்களால் நிறைய,
கவலைகள் உருமாறி,
அலுவலாகத் தொடங்கியது.

காலம் கரைய, இதோ உணவு வேளை.
பசி மட்டுமே தணிக்கும் உணவினை தேடி ஓடுகின்றேன்.
அதோ அப்புறாக்கள் கூட இன்னும் மேய்கின்றன.
அசதியான ஒரு மாலையில் மீண்டும்,
எந்திரங்கள் முடுக்கப்பட,

முடிவில்
இதோ இரவின் எதிர்பார்ப்போடு
ஓர் நடைப்பிணம் அறை நோக்கி நகர்கின்றது.
நாளை
மீண்டும் அதே மீட்டலுக்கு தயாராகவென…


3 comments:

ramalingam said...

நல்ல கவிதை. நல்ல ஃபான்ட். நடுங்கும் அல்லது நெளியும் அல்லது சிதிலமான அந்த வார்த்தைகள் கவிதையின் கருப் பொருளை உணர்த்துகின்றன.

Riyas said...

நல்ல கவிதைங்க..

Anonymous said...

ஒருநாள் பொழுது போனவழி-கவி
உணர்த்த உங்கள் சோகமொழி
மறுநாள் கதையும் அதுதானே-துளி
மாற்ற மில்லை இதுதானே

உள்ளக் குமுறல் ஆகிறது-தினம்
உலகம இப்படி போகிறது
சொல்ல வந்தீர் நன்றதனை-தம்பீ
சொன்னீர் தெளிவாய் இன்றதனை
புலவர் சா இராமாநுசம்