Sunday, December 25, 2011

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

 வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் புதிய தலைமுறைக்கு கிட்டவே இல்லை என்பதை விட, அவர்கள் அதை நிராகரித்தே விடுகின்றனர். ஏன் வளர்ந்தவர்களும் கூடத்தான்.


எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது. 

இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு போலாகிவிட்டனர்.

சினிமா கிசு கிசுக்களை பகிரவோ, அதை விவாதிக்கவோ தயாராகின்ற நண்பர்கள், ஒரு நூல் பற்றி அதன் வாசிப்பனுபவம் பற்றி கேட்பதற்கோ விவாதிப்பதற்கோ தயாராகுவதில்லை. அது பற்றிய சிறிய அனுபவங்கள் கூட இல்லாமல்தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஒத்த ரசனை கொண்டவர்களை இலகுவாக இனங்கண்டு அஹ்டு பற்றிய விடயங்களை மேலும் விவாதிப்பது போல, தீவிர வாசக நண்பர்களை காண்பது இப்போது மிக அரிதாகிவிட்டது.

திரைப்படங்களின் வெளியீடு பற்றிய செய்திகள், தினங்களில் காட்டுகின்றா அக்கறையினை வேறு நூற்களில் காட்டுகின்ற நண்பர்களை இது வரை நான் சந்தித்ததில்லை. ஒரு குழாமில் அது தொடர்பில் ஏதாவது பேச முனைந்தால், எல்லோரும் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நம்மை நோக்குவார்கள். அதன் பின் நாம் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வுடன் இருந்து தொலைக்க வேண்டியிருக்கும்.

இதிலும் இன்னொரு அவலம், ஒரு நூல் பற்றிய சுவாரசியத்தினை யாரிடமாவது பகிராவிட்டால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில், ஓரளவுக்காவது தேறுவான் என நினைக்கும் நண்பனிடம் போய் சொல்லுவோம். அவனோ, சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்ப்பானே ஒரு பார்வை!!!!!!!!!! எங்காவது போய் முட்டிக் கொள்ளத்தான் தோன்றும். 

இதை விடுங்கள், என்னிடம், ஆனந்தவிகடன் தினசரியா எனக் கேட்ட நண்பன் கூட இருக்கின்றான். சினிமா சார் ஒரு ஜனரஞ்சக பத்திரிகை தொடர்பான எமது அறிதல் இந்தளவுக்கே இருக்கின்றது.

தீவிர வாசகனாய் இருப்பதில் இன்னும் இன்னும் எத்தனையோ அவஸ்தைகள், இன்னல்கள் இருந்தும் அதை தொடர காரணம் – விடமுடியவில்லை என்பதுதான், அது ஒரு போதை – மீள முடியாத போதை. இதை வாசகர்கள் ஒத்துக் கொள்வார்கள்.


No comments: