Thursday, May 21, 2009

ஒரு அண்ணனும் நானும்


அன்று மிக அவசரம் வேலையினை முடிக்க வேண்டும். கம்பியூட்டரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.“அண்ணே…..” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஹோட்டலில் துப்பரவுப்பணியில் ஈடுபடும் ஒருவர், வயசு 35 க்கு மேல் இருக்கும். முகத்தில் சோக ரேகை முழுதாக மூடியிருந்தது.என்ன? என்பது போல என்ற பார்வைக்கு, “உங்க ஆபிஷ கிளீன் பண்ண சொல்லி சூப்பர்வைசர் அனுப்பிச்சார்………….” என்றவாறு இழுத்தார். அவரின் பேச்சும் நடைத்தையும் என்னை அசௌகரியப்படுத்தின. வரிக்கு வரி எனக்கு அவர் மரியாதை செய்வது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

“இந்தியாவா??”“ஆமா சார்..”“பெய்ரென்னங்க?”“கண்ணன் சார்”“ஐயோ அண்ணே….. நான் உங்க தம்பி மாதிரி என்ன சார் போட்டு இனி கூப்பிடாதீங்க”என்ற என்னை ஆச்சரியமாக ஏறிட்டார். அதன் பின்தான் அவரிடமிருந்து சினேகமான புன்னகை ஒன்று வந்தது. வந்த வேலையினை ஆரம்பித்துவிட்டார்.எனக்கு ஏனோ தெரியவில்லை அவரிடம் பேச வேண்டும் போல் ஒரு உந்தல்.“இந்தியாவில எங்கண்ணே?”“தஞ்சாவூர் பக்கம் மன்னார் குடி சா………….” என்றவர், “தம்பி” என்று மெதுவாக முடித்தார்.“துபாய் வந்து கன நாளா?”“இல்ல இப்பதான் ஒரு மாதமாகுதுங்க..”இவரை சகஜமாக்குவது ரொம்ப கஷ்டம் என்று எண்ணிக்கொண்டேன்.

அதன் பின் என் வேலைகள் எனது அட்மினிஷ்ரேற்றரின் முகத்துடன் ஞாபகம் வர, என் வேலைகளில் மூழ்கிப்போனேன். பகலுணவு இடைவேளை, துப்புரவு தொழிலாளர்களின் ஓய்வறையினை கடந்துதான் என் அறைக்கு செல்லவேண்டும். அவரின் நினைவு வர திரும்பிப்பார்த்தேன். ஓரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் இவரை விட இளையவர்கள் என்பதால், இவர் தனித்திருக்கின்றார் என்பது புரிந்தது. மாலை பணி முடிந்து வெளியேறும் போது, நின்று கொண்டிருந்தார். “என்னண்ணே வேல முடிஞ்சதா?”“ஆமாங்க.. கம்பனி வண்டிக்கு காத்திருக்கங்க”“ஐயோ அண்ணே.. சும்மா கதைங்க.. நான் ஒண்ணும் பெரிய ஆளில்ல, சும்மா கதையுங்கோ..” என்ற என்னைப்பார்த்து சிறிய புன்னகை“வண்டி வந்திடிச்சு. வர்ரேன் தம்பி” என்று அழுத்திச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அன்றிரவு ஏனோ தெரியவில்லை. அவரின் முகமே வந்து நின்றது. என்னென்னவோ சிந்தனைகள்..10, 11 வயதில் அம்மாவிடம் கேட்கும் ஒரு வினா இன்று மறுபடி வந்தது.“எனக்கு ஏன் ஒரு அண்ணன் இல்ல?” இது நான்.“நீதான் மூத்த பிள்ள. அதான் உனக்கில்ல, உன் தங்கச்சி மாருக்கு நீ அண்ணன்.” என்று ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டு அம்மா நகர்ந்துவிடுவார். அம்மாவின் பதிலில் எனக்கு திருப்தி இல்லை. காலம் மாறி எனது வாழ்க்கையில் சுமைகள் கூடிய பொழுதுகளில், “ சே……..! நான் மட்டுமே எல்லாவற்றையும் சுமக்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு தோள் கொடுக்க ஒரு அண்ணன் இல்லாமல் போனானே….” என்ற எண்ணம் சுய பச்சாதாபமாக வெளிவரும்.

இன்று என்ன நடந்தது எனக்கு? என்று என் மேல் எனக்கே ஆச்சரியமாகிப்போனது.வழமையான காலை..“தம்பி..” என்ற சினேகபூர்வமான ஓலி ஒருவித எதிர்பார்ப்புடன் என்னை திரும்பவைத்தது. அவர்தான்.நேற்றுப்பார்த்த சங்கோஜம் இன்று அவரிடம் குறைந்திருந்தது. சிறிய புன்னகையினை உதிர்த்துவிட்டு, தளபாடங்களை சுத்தப்படுத்த ஆரம்பித்தார்.“நாஷ்டா முடிஞ்சுதா அண்ணே”“ஆமா தம்பி ஆச்சுது”“பிறகு சொலுங்கண்ணே துபாய் எப்படி இருக்கு? வேல பிடிச்சிருக்கா” என்ற என் கேள்விக்கு ஒரு நீண்ட மௌனத்தின் பின்பே அவரிடமிருந்து பதில் வந்தது.“ எங்க தம்பி… 1ரூபா செலவழிச்சு இங்க வந்திருக்கு. மாச சம்பளம் 850 திர்ஹமு. சாப்பாட்டுக்கு போக மிஞ்சிறது 650 திர்ஹமு. இத வச்சி என்ன செய்றது? புள்ள குட்டிகள எங்க காப்பாத்துறது?” என்ற அவரது வார்த்தைகளில் தேங்கி நின்ற கவலை என்னையும் சூழ்ந்து கொண்டது“எத்தன பிள்ளைங்க?”“மூன்று பிள்ளைங்க தம்பி..” என்று ஒரு ஆயாசத்துடன் சொன்னார்.

அதன் பின் அவருக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டுப்போனது. எனது அலுவலக அறையினை அவரது கண்ணுக்குள் வைத்துப்பார்த்துக்கொண்டார். எப்போதும் , இறைந்து கிடக்கும் என் அறை இப்போது கிளீனாக காட்சி அளித்தது. ஏதாவது வேலை என்றால் எனது அறையினை கடந்து செல்லமாட்டார். உள்ளே வந்து, “வணக்கம் தம்பி” என்று சொல்லி ஏதாவது கதைத்துவிட்டுத்தான் செல்வார்.

ஒருநாள் மதிய வேளையில், அவரை கண்டேன்.“என்னண்ணே சாப்பிடல்லயா?” “சாப்பிடத்தான் தம்பி” என்றவாறு, “உங்க சாப்பாடு எப்படி சொந்த சமையலா?” என்றவரிடம், “அதுக்கு எங்கண்ணே நேரம், பாகிஸ்தானி ஒருவர் இருக்கார் அவர் சமைப்பார். இப்பல்லாம், ருசிக்கு ஒன்னும் கிடைக்கிற இல்ல. பசிக்குத்தான் சாப்பிடுற, வீட்ட எண்டா, அம்மா வக்கிர கருவாட்டுக்கொழம்பு மணத்திலயே சாபிடலாம். இஞ்ச அதெல்லாம் முடியுமா?” என்ற என்னை நோக்கி,“கருவாட்டுக்கறி எண்டா தம்பிக்கு நல்லா பிடிக்குமோ?” என்றவரிடம்,“பின்னே! அதுக்கு ஈடு இருக்கா அம்மா கையால சம்ச்சா அதவிட வேற என்ன வேணும்?”இதைக்கேட்டதும் சத்தமாக சிரித்தார். “அம்மா பிள்ளை..” என்றார்.

அது ஒரு வியாழக்கிழமை காலை,“தம்பி இன்னைக்கு உங்களுக்கும் சேர்த்து கறி கொணாந்திருக்கன். தப்பா எடுத்திக்கலேன்னா……..” என்று இழுத்தவரிடம்.“ஐயோ.. அண்ணே என்ன இது? எடுத்துவாங்க. அத சாப்பிடாம வேற என்ன வேல?”ஒரு குழந்தையை போல துள்ளியவாறு அக்கறி டப்பாவுடன் என் முன் நின்றார். “இன்னைக்கு மத்தியானம் ஒரு புடி புடிக்கன் பாருங்க” என்றவாறே அதை என் மேசையில் வைத்துவிட்டு அவரை நோக்கினேன். முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.எனது துரதிஷ்டம் அன்று பார்த்து மனேஜ்மென்ற் மீட்டிங்க் வடிவில் வந்து என் பகல் உணவை தின்று கொண்டிருந்தது. மாலை, 5 மணி, மேசையில் அவர் தந்த கறி. எடுத்துக்கொண்டே, அறையினை நோக்கி நடக்கலானேன். அப்பாடா! இன்றைக்கு பாகிஸ்தானியின், உருழைக்கிழங்கிலிருந்து விடுதலை. என்றவாறு இரவு உணவுக்கு அவரின் கறியினை திறந்தேன். கருவாட்டுக்கறி.. வாசனை மூக்கினை துளைத்தது. நல்ல ருசி.. ஆறேழு மாதங்களின் பின் நல்ல திருப்தியான சாப்பாடு. அவரின் அன்பினை எண்ணி நெகிழ்ந்து கொண்டேன்.அவரினை சந்திக்க வேண்டும் என்ற என் ஆதங்கம் பெரிதானது.

வெள்ளி விடுமுறை நத்தை போல நகர்ந்து ஒருவழியாக சனி வந்தது.காலை அவரைக்காண அலுவலகம் நோக்கி ஓடினேன். எப்போதும் நான் வருவதற்கு முன் அலுவலகத்தினை திறந்து துப்புரவு செய்யும் அவரை காணவில்லை. அறை பூட்டிருந்தது.அலுவலக உதவியாளனிடம் கேட்டேன்.“கண்ணன் எங்கே?”“தெரியாது.” என அசிரத்தையாக பதில் சொன்னான்.அவனை சபித்தவாறே, அவரது, சக தொழிலாளி ஒருவரைடம் வினவினேன்.“ஆ……….! கண்ணனா சார், அவர கன்ஸ்ரக்ஸன் சைட் ஒன்றுக்கு மாத்திட்டாங்க.

”ஏதோ ஒன்று என்னை விட்டு போனது போல உணர்வு.சூன்யமாக எல்லாம் தெரிந்தது..“வட் ஹெப்பன்ற் சேர் எனிதிங்க் ரோங்க்” என்ற பிலிப்பினிக்கும் ஒன்றும் சொல்லாமல் மேசையில் தலையினை கவிழ்த்துக்கொண்டேன். எந்த ஒரு உறவும் இல்லா உணர்வு இப்போது மேலும் சுடத்தொடங்கியது..

ஆனாலும், அவரின் கறி மணம் இன்னும் என் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

1 comment:

நிரூஜா said...

இது வெறும் கதையோ அல்லது நிஜமோ தெரியவில்லை. ஆனால் கதையாக மட்டுமே இருக்கவேண்டும் என்று மனம் துடிக்கிறது.