Thursday, April 22, 2010

நீண்ட கனவொன்றின் தொடக்கம் போல் இருந்தது - நம் முதல் கணங்கள்..

நீண்ட கனவொன்றின் தொடக்கம் போல் இருந்தது -
நம் முதல் கணங்கள்..
வார்த்தைகளினை விழுங்கிக்கொண்டே
உன்னைத் தவிர்த்து
அனைத்தினையும் நோக்கிய
அத்தருணங்கள் பற்றி எண்ணும் போது..
அது
நீண்ட கனவொன்றின் தொடக்கம் போலவே இருந்தது.

துயர் பற்றி அறியா நாட்களில்..
உன் பாடல்களில் லயித்துக்கொண்டே..
உன்னை ..
உன்னை மட்டுமே துதித்துக்கொண்ட
அக்காலங்களினை
இன்று நான் என்ன பெயரிட்டு அழைப்பது?
நீயும் சொல்லாமல் சென்றுவிட்டாய்.
அது நீயும் நானும் கண்ட நீண்ட கனவொன்றா?
இல்லை …
இப்போதும் நான் குழம்பிக்கொள்கின்றேன் பெண்ணே..
எதைச்சொல்லி அதை அழைப்பதென..

நீ ஒன்றும் திரும்பபோவதில்லை..
ஆனாலும்,
ஒரு சுமை போல அவ்வினாவுடன் அலைகின்றேன்
நீ வருவாய் என்கின்ற நப்பாசையுடன்…
__________________

No comments: