Tuesday, May 18, 2010

இந்திய கிரிக்கட் : வினையாகிப்போன விளையாட்டு.


இந்திய கிரிக்கட் : வினையாகிப்போன விளையாட்டு.

இப்பத்தியினை ஆரம்பிக்கு முன்பே ஒன்று சொல்லிவிடுகின்றேன். இது இந்திய கிரிக்கட்டின் உலகக்கிண்ண் தோல்வியின் உந்துதலால் எழுதப்படும் ஒன்றல்ல. முன்பே அரித்துக்கொண்டிருந்த விடயம். ஆனாலும் இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற உந்தல் எனக்குள் வந்துவிட்டது. இல்லாவிட்டால், அது உள்ளிருந்து குடைந்து கொண்டே இருக்கும் மக்களே அதுதான். ஆகவே இது எனக்காக

விளையாட்டு வீரர்களினை ஆதர்ச நாயகர்களாக, தங்களது பிரதிந்திகளாக பார்க்கும் மனோபாவம் எங்குமுள்ளது. ஆனாலும் இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு இந்தியர்களால் அளிக்கப்ட்டுள்ள நட்சத்திர அந்தஸ்து வேறு ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. அதனால்தான், அவர்களுக்கு மலர்மாலைகளும் , கல்லெறிகளும் மாறி மாறி கிடைக்கின்றன. அவர்கள் போட்டிகளில் தேற்கும் போது அதற்காக ஆவேசப்படும் ரசிகன், அவர்களின் வெற்றியினையும் தலையில் வைத்துக்கொண்டாட தயங்குவதுமில்லை, வெட்கப்படுவதுமில்லை. இந்நிலை இந்தியாவில் கிரிக்கட்டிற்கு மாத்திரம்தான் உள்ளது என்பது ஒரு அசாதாரணமே.

உலகக்கிண்ண போட்டிகளில் இந்தியா பரிதாபகரமாக வெளியேறியே அதே நாளில் விஸ்வநாத் ஆனந்த் உலக கிண்ண சதுரங்க போட்டிகளில் நான்காவது முறை சாம்பியனானார். இது பற்றி எத்தனை இந்தியர்கள் அறிந்திருப்பார்கள்? அதில் எத்தனை பேர் அதனை ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் அங்கீகரித்திருப்பர் என்பது கேள்விக்குறியே! , அதோடு ஊடகக்ங்களும் இதற்கு எந்தளவு முக்கியத்தினை அளித்திருக்கும் என்பதும் நாம் அறிந்ததே. இந்திய கிரிக்கட் அணியினரின் தோல்வி பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களினை ஆக்கிரமித்த அளவில் பாதியினை கூட விஸ்வனாத் ஆனந்தின் வெற்றி பற்றிய செய்தி தாண்டியிருக்காது. உணமையில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம். உண்மையில் கிரிக்கட் ஒன்றும் நுட்பமான ஆட்டம் கிடையாது. எல்லைக்கோட்டை தாண்டினால் 4 அல்லது 6. உயர எழும் பந்தினை பிடி எடுத்தால் ஆடமிழப்பு. களிகளில் நேரடியாக பந்து மோதினால் ஆட்டமிழப்பு, ஓவர் என்பது 6 பந்து வீச்சுக்கள் என எளிதான விதிகளினை கொண்டமைந்த ஒரு ஆட்டமே. ஆனால் சதுரங்கம் அவ்வாறில்லை. அதன் நுட்பங்கள் மிக மிக சிக்கலானவை. பொறுமையுடன் அவதானத்துடன் ஆட வேண்டிய ஒரு ஆட்டம். ஒரு சிறு தவறு கூட எதிராளிக்கு சாதகமாகிவிடும் அபாயம் உண்டு. இவ்வாறு அதிக திறன் வேண்டி நிற்கும் ஒரு ஆட்டத்தில் வென்ற ஒருவரினை ஒரு நாடு கண்டுகொள்ளாமல், உடல் வலுவினை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு ஆட்டத்திற்கு முழு நாடுமே அடிமைப்பட்டமாதிரி கிடப்பதும், அவர்களின் தோல்வியினை ஏதோ நாட்டின் அவமானமாக கருதுவதும் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ( ?!@### ).

இம்மனநிலை மற்ற விளையாட்டுத்துறையினருக்கு ஒரு வித சலிப்பினையும் அசிரத்தினையும் ஏற்படுத்தும் அபாயம் நிலவுகின்றது. எத்தனையோ கிரிக்கட் தவிர்ந்த சாதனை வீரர்கள், இக்கிரிக்கட் எனும் காட்டாற்றில் காணாமல் போய் விட்டனர். அவ்வாறு தொலைந்தவர்கள் பற்றி இதுவரையில் யாருக்கும் கவலை இருக்கும் என்று எண்ணவில்லை. நமது கவலை எல்லாம்- அடுத்த சிம்பாவே கிரிக்கட் தொடரிலோ அல்லது 2011 உலகக்கிண்ண கிரிக்கட்டிலோ இந்திய கிரிக்கட் அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதே..

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, நேற்று (17/05/2010) இந்திய கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை அணியின் நான்கு வீரர்கள் ( யுவராஜ் , நெஹ்ரா , ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா) மேற்கிந்தியத்தீவுகளில் மதுபான சாலைகளில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஹா.. இது IPL பழக்கம் West Indies வரைக்கும் என்பது போல உள்ளது.
IPL ல் மதுவுக்கும் களியாட்டங்களிற்கும் எந்த தடையினையும் விதிக்காத இந்திய கிரிக்கட் சபை , இப்போது அதே பணியினை மேற்கிந்தியந்த்தீவில் IPL ல் உண்டு களித்து, அழகிகளுடன் ஆடிப்பாடிய அதே விளையாட்டுப்பிள்ளைகள் செய்யும் போது அதற்கு விளக்கம் கேட்பது.. சின்னப்புள்ளத்தனமா இல்ல……ஹையோ ஹையோ,,,, அங்கு அவர்களினை மௌனிக்கச்செய்தது கரன்சிகள். அவ்வளவே!. இது ஒரு எளிய சமன்பாடு.
விளையாட்டுக்கள் எப்போதும் , கட்டுக்கோப்பு , தலைமைத்துவம், பொறுப்புணர்வு போன்ற தனி மனித ஆளுமைகளுடன், குழு ரிதியான ஆளுமைகளினையும் வளர்க்க உதவும். அது எல்லா விளையாட்டுக்களிலும் எதோ ஒருவகையில் வெளிப்படும் ஆனால் இந்திய கிரிக்கட் அணியிடம் அது இல்லை. இந்திய அணி, “ தனி நபர்களின் கூட்டு ‘ என ஒரு பிரபல கிரிக்கட் விமர்சகர் சொல்கின்றார் ( பெயர் மறந்து விட்டது ). அதாவது அது ஒரு குழு அல்ல. அங்கு குழுச்செயற்பாடு இருக்காது என்பதே இதன் மறுதலை. உணமைதான். அங்கு ஒரு கட்டுப்பாடு இல்லை , ஒருமைப்பாடு இல்லை என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிப்ப்டுள்ளது. கடைசியாக மேற்கிந்திய தீவில் வீரர்களின் களியாட்ட சர்ச்சை.

இதற்கு காரணமும் , அவர்களிற்கு நட்சத்திர அந்தஸ்து அளித்துள்ள கிரிக்கட் வெறியர்கள்தான். (ஆமாம் அவர்கள் ரசிகர்கள் இல்லை. வெறியர்கள் என்பதே பொருத்தம்..). இதனால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை. அணி வெல்லும் போது ஏற்படும் ஒரு கொண்டாட்ட மனநிலை தவிர. ஆனால் வீரர்களுக்கு, வருமானங்களுக்கான வழிகள் இப்போது IPL மூலம் இன்னும் விசாலப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு தேசிய அணியில் விளையாடுவதை நோக்காக கொண்டு பிராந்திய மட்டங்களில் ஆடிய வீரகள், இப்போது IPL இனை குறி வைத்தே தங்கள் மட்டைகளினை சுழற்றுகின்றனர். அவர்களின் வருமான இலக்குகளினை இக்கிரிக்கட் வெறியர்கள் இன்னும் இலகுவாக்கிவிடுகின்றனர். அதோடு இவர்கள் நின்றுவிட.. அவ்வீரர்கள் , தங்கள் கல்லாக்களினை நிறப்புவதில் குறியாக இருக்கின்றனர். அதன் பின் , நாடாவது மண்ணாங்கட்டியாவது.. நாலு விளம்பரப்படங்களில் நடித்தோமா? IPL ல் நல்ல விலைக்கு போனோமா என்று அவர்களின் காட்டில் மழைதான். ஆனால் நமது கிரிக்கட் வெறியர்கள் , இன்னோரு கத்துக்குட்டியினை நட்சத்திரமாக்கும் முஸ்தீபுகளில் ஈடு பட்டிருப்பர்.

எப்போது இந்தியர்கள் கிரிக்கடினை , ஒரு விளையாட்டாக பார்க்கும் மனநிலைக்கு மாறுகின்றனரோ அன்றுதான் மற்ற விளையாட்டுக்களுக்கும் வீரகளுக்கும் இந்தியாவில் நல்ல காலம் பிறக்கும். அதுவரைக்கும், அவர்கள் அனுசரணைக்கும் , விளையாட்டு உபகரணங்களுக்காகவும் தவமிருக்கும் நிலையினை தொடர வேண்டியதுதான்.

இனி நான், இந்திய அணி ஆடுகின்ற போட்டிகளினை பார்க்கும் நிலை வந்தால் அதற்கு பதில் , ரித்திக் அல்லது சாம் அண்டர்சன் திரைப்படங்களினை ( !@#$$$!!!!) பார்ப்பதாக முடிவுகட்டியுள்ளேன். நீங்கள் என்ன முடிவு செய்துள்ளீர்கள்?????????




1 comment:

Unknown said...

இது நல்ல கருத்துதான். இந்த நிலைக்கு வந்துவிடலாம் என கிரிக்கெட்டில் வாழ்க்கையை தொலைத்தவர் எத்தனையோபேர். ஆம் உங்கள் கருத்து நியாயமானதே.