Saturday, May 29, 2010

எப்படி என்றாலும் - நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை.



நண்பர்கள் உலகம் ஒரு உணர்வுக்கலவையால் ஆனது. ஒரே குறுப்பில் பல்வேறுபட்ட நடத்தைக்கோலங்களுடனும் பண்புகளுடனும் நண்பர்கள் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது நட்பு.

எனது கல்லூரி வாழ்க்கையிலும் ஒரு நட்பு வட்டம் உருவானது. அது எங்களது ராகிங்க் காலத்தில் உண்டானது. ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்து கொண்டவர்கள். ஆனால் கல்லூரி முடியும் வரை ஒன்றாகவே இருந்தோம். அதன் பின் ஆளுக்கொரு திசையாக சிதறிப்போனது வேறு கதை. இப்போது ஒவ்வொருவரும் எங்கெங்கோ? சிலர் தொடர்பெல்லைக்கு அப்பால் கூட..

விடுமுறைக்காக ஊருக்கு செல்லும் காலங்கள் மிக மிக சுவாரசியத்தினையும் உற்சாகத்தினை ஏற்படுத்துவதாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிக சலிப்பாகவும், எப்படா இந்த விடுமுறை முடியும் மீண்டும் ஓடி விடலாம் எனத்தோன்றுகின்றது. இதற்கும் காரணம் நண்பர்களே. முன்பு, ஊருக்குப் போனால் எல்லோரும் ஊரில் இருப்பார்கள், முழ் நாளும் அவர்களுடனே பொழுது போகும், எங்களுக்கென்று ஒரு மரத்தடி , பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை, பேச பை நிறைய விசயங்கள், பழங்கதைகள் என காலம் போவதே தெரியாது. இதுவும் சலித்தால், வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினால், ஐந்தாம் கட்டை வாய்க்காலில் ஒரு குளியல். பின் திரும்பி அங்குள்ள வயல் கடையில் சுடச்சுட பிட்டு ஆஹா. அது ஒரு வசந்த காலம்.

இப்போது , விடுமுறைக்கு செல்கின்ற வேளைகளில் ஊரில் யாருமில்லை. மரத்தடி பெட்டிக்கடை, வாய்க்கால் எல்லாம் இன்னொரு குழுவால் முற்றுகை இடப்பட்டிருக்கும். முன்பு தூங்க மட்டும் பிரிந்த அதே நண்பர்கள் இப்போது , சொந்த சொந்த வேலைகள் பிரச்சினைகளுடன், எங்காவது வீதியில் கண்டால் கூட, வந்தது பற்றி, போவது பற்றியும் இன்ன பிற வழமையான வினாக்களுடன் அந்த ஐந்து நிமிட சந்திப்பு நிறைவுறும். போகும் போது நிச்சயமாக, “மச்சான் ப்றியா ஒரு நாளைக்கு கதைப்போம். கட்டாயம் வாறன்என்று சொல்லுவான். ஆனால் நிச்சயமாக நடக்காது. பிறகென்ன நாம் வீட்டில் மோட்டினை பார்த்துக்கொண்டு படுத்திருந்துவிட்டு, பெட்டியை இரண்டு நாட்கள் முன்பு கட்ட வேண்டியதுதான்.

ஆனால் உண்மையில் இது யதார்த்தம். வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் உண்டாகும் மாற்றங்கள் மனிதர்களினை வேறு திசைக்கு இழுத்துச்சென்று விடுகின்றது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது எனினும் , மாறுகின்ற வேகத்தில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். அதுதான் என்னைப்போன்ற சிலரை தொல்லைப்படுத்துகின்றது.

இப்போது எனது குழாமில் திருமணம் எனும் அபாயத்திற்குள் ( @#!!#@ ) அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே! அதனால் என்னால் முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இருக்க முடிகின்றது. பின்னிரவில் வீடு செல்ல முடிகின்றது , விரும்பியவாறு சுற்ற முடிகின்றது என எல்லாம் ..கிறது. ஆனால் நண்பர்களின் நிலை அவ்வாறில்லை, திருமணம் முடித்தவன் , 9 மணி என்பதை ஏதோ ஒரு மிரட்சியுடந்தான் நோக்குவான். பிந்திப் போனால் என்ன தண்டனை கிடைக்குமோ அவனுக்கு நான் அறியேன். ஆனால், இப்போது அவனுக்கான நிகழ்ச்சி நிரல்களில் அவனது மனைவி மற்றும் அது சார்ந்த விடயங்கள் மட்டுமே உள்ளன. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று. அவனுக்கு மனைவி என்பது போல..

எப்படி என்றாலும் - நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை.

2 comments:

மகாபிரபு said...

வணக்கம் தங்கவேலு அண்ணா

Admin said...

வணக்கம் மகாபிரபு.. நான் தங்கவேல் அண்ணனில்லை